நகராட்சியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மூலம் உருவான குப்பைகள் அகற்றப்பட்டன.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகைக்கு பிறகு கரூர் நகராட்சி பகுதியில் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நகராட்சி பகுதியில் உள்ள பிரதான வீதியான ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு, வடக்கு பிரதட்ணம் சாலைகள், ஈஸ்வரன் கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கடைகளில் ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கடந்த சில தினங்களாக விற்பனையாகி வந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் லட்சக்கணக்கான மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதனால், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்த கடைவீதிகளில் அதிக அளவில் குப்பை ஏற்பட்டது.கரூர் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகளில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு லாரிகள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.சாதாரண நாட்களில் கரூர் நகராட்சி பகுதியில் சுமார் 70 டன் குப்பை சேகரிக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு தற்காலிகக் கடைகள் மூலம் சுமார் 20 டன் குப்பைகள் அதிகமாகேற்பட்டு இருக்கும் இவைளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.