கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களின் நிலை என்ன?-கிராமங்களில் சோகம்
குமரியில் இருந்து கடலுக்கு மீன் சென்ற 16 மீனவர்களின் நிலை 27 நாட்கள் ஆகியும் தெரியாததால் மீனவ கிராமங்களில் சோகம்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த ஜார்ஜ் திலகன் உட்பட கன்னியாகுமரி குளச்சல் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியிலிருந்து கடந்த மே 5 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பொதுவாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு 15 நாட்களுக்குள்ளாக மீனவர்கள் திரும்பி வருவது வழக்கம், ஆனால் தற்போது 27 நாட்கள் ஆகியும் மீனவர்கள் திரும்பி வரவில்லை, இதனிடையே இந்த 27 நாட்களில் தவ் தே புயல் மற்றும் யாஸ் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் அந்த மீனவர்கள் யாரும் 16 மீனவர்களையோ அவர்கள் சென்ற படகையோ பார்க்கவில்லை என கூறுவதால் 16 மீனவர்கள் கதி என்ன என்பது தெரியாத நிலையில் கன்னியாகுமரி மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.
இதனிடையே மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெலிகாப்டர் அல்லது கடலோர காவல் படை மூலமாக மீனவர்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.