திக்கு தெரியாமல் திரிந்த வெளிநாட்டு சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
குமரியில் திக்கு தெரியாமல் திகைத்த வெளிநாட்டு சிறுவனை போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி கடற்கரையில் 13 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார்.
அவரிடம் ரோந்து பணியில் இருந்த கன்னியாகுமரி காவல் நிலையத்தின் முதல்நிலை காவலர் கலைச்செல்வி விசாரணை செய்தபோது அவருடைய பெயர் மீல மாதவா என்றும், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வருவதாகவும் தனது குடும்பத்தினர் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை செய்தபோது உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கோவர்தன் என்ற காவல் நிலையத்தில் சிறுவன் காணாமல் போனதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவருடைய பெற்றோர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வாசுதேவ ஜார்வினன், அலெக்ஸான்ட்ரா ஜார்வினன் தம்பதியர் என்பதும் அவர்கள் சுமார் 14 வருடங்களாக உத்தர பிரதேசத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உத்தரபிரதேச காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறுவனின் தந்தை மற்றும் போலீசார் குமரி மாவட்டம் வந்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் கோட்டார் காவல் நிலையத்தில் வைத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவனை கண்டெடுத்த கலைச்செல்வி என்ற பெண் காவல் அதிகாரிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.