நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை
குமரியில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்கான்பியா (40), வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவரின் மனைவி வனஜா ( 33 ) தனது இரு பெண் குழந்தைகளுடன் செட்டித்தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
வெளிநாட்டில் பணியை முடித்து சொந்த ஊர் திரும்பிய ஜோஸ்கான்பியாக்கு, வனஜாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஜோஸ்கான்பியா, மனைவி வனஜாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மேலும் பள்ளி முடிந்து வந்த குழந்தைகள் தாய் எங்கே என கேட்ட நிலையில் அவர்களின் வாயில் துணியை வைத்து கட்டி போட்டு உள்ளார், இதனிடையே இன்று மூத்த மகள் அர்ச்சனா சத்தம் போட்டதால் அவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய நிலையில் செய்வதறியாது இருந்த ஜோஸ், இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து இன்று குழந்தைகள் கதறி அழுது கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் கூறிய நிலையில், இது குறித்த போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த கோட்டார் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றியதோடு கத்தி குத்து காயங்களுடன் இருந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து இரு பெண் குழந்தைகளும் அனாதை ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.