காஞ்சிபுரத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் நாளை முதல் துவக்கம்
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் 17 வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை நாளை காலை துவங்குகிறது
HIGHLIGHTS
கொரோனா பரவல் சங்கிலையை தடுக்கும் வகையில் நாளை முதல் தமிழகத்தில் ஒரு வார தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி பொருட்களை பெருநகராட்சி, நகராட்சி , ஊராட்சி தோறும் காய்கறி வண்டிகள் வீடுதேடி வரும் எனவும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் மொத்தம் சுமார் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்காக நாளை காலை முதல் 17 காய்கறி வாகனங்கள் இயங்க உள்ளதாகவும் , இதேபோல் ஒருங்கிணைக்கப்பட்ட வார்டு பகுதிகளில் 61 அனுமதிக்கப்பட்ட தள்ளு வண்டிகள் மூலமும் காய்கறி விற்பனை நடைபெறுமென பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதன் துவக்க விழா நாளை காலை நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
பொதுமக்களுக்கு வீடு தேடி காய்கறி வருவதால் தேவையற்று வெளியில் சுற்றாமல் அரசு விதிகளை கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.