மாண்டஸ் புயல் காரணமாக குடிசையில் வசிப்பவர்களு க்கு வருவாய் துறை வேண்டுகோள்
மாண்டஸ் புயல் காரணமாக குடிசையில் வசிப்பவர்களு க்கு காஞ்சிபுரம் மவாட்ட வருவாய் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என இன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை விடப்பட்டு இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியது.
அவ்வகையில் மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதலே சாரல் மழை அவ்வப்போது பெய்தும் தொடர்ந்து காற்று அவ்வப்போது அதிகரித்தும் தொடர்ந்து வீசி வருகிறது.
மேலும் இப்புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இப்புயலுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 குழுக்களை நியமித்துள்ளார்.
இதில் வருவாய்த்துறை, காவல்துறை மின்சார துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட 11 துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்களை நியமித்து அவர்களுக்கான பகுதிகளை அறிவித்து அந்தந்த இடங்களிலே தங்கி இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் உதவிகள் தேவைப்படும் எனில் உடனடியாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தை அணுக வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் பேரிடர் கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும் இதில் கட்டணம் இல்லா தொலைபேசியில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் குறைகளை உடனடியாக தெரிவித்து நிவாரணம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காற்று வேகம் காரணமாக சாலை ஓரங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அல்லது மரங்கள் ஆகியவற்றை கண்டறிந்து உடனடியாக தீயணைப்பு துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் மரம் உள்ளதாக கண்டறியப்பட்டு அதனை மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவியுடன் தீயணைப்பு துறையினர் அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் , வாலாஜாபாத் வட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசையில் வாழும் மக்களுக்கு புயலின் தாக்கம் குறித்து விளக்கப்பட்டு புயல் கரை கடக்கும் வரை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் காற்று வீசும் நிலை அதிகமானால் எச்சரிக்கையாக அறிவிக்கப்பட்டு மின்தடை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாக மின்சார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நாளை மற்றும் புயல் கரை கடக்கும் வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பாக அரசு அறிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மீண்டும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.