காந்தி ஜெயந்தி மினி மாரத்தான் ஓட்டம் : வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
உடல் ஆரோக்கியம் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஃபிட் இந்தியா 3.0 சுதந்திர ஓட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய மக்கள் அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக் கென நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், சோம்பல், மன அழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும், உடல் தகுதியினை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது ..
அவ்வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், ஃபிட் இந்தியா 3.0 சுதந்திர ஓட்டம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணிக்கு தொடங்கியது .மினி மாரத்தான் ஓட்டத்தினை காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர்கள் பேசில் பிரேம் ஆனந்த் , சுந்தர்ராஜன் , ரோட்டரி சங்க ஆளுநர் பரணிதரன் , காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் , மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். இதற்கு முன்பாக மகாத்மா காந்தி உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி பழைய இரயில்வே ஸ்டேஷன் ரோடு, காமாட்சி அம்மன் சன்னதி தெரு, பேருந்து நிலையம் செல்லும் வழியாக, இந்து மெடிக்கல், கால்நடை மருத்துவமனை, வழியாக ஆரம்ப இடமான பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.
இப்போட்டியில் ஆண், பெண் இருபால் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் , குளிர்பானம், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.