மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதிய நிலுவை , உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் மாநகராட்சி ஆணையர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக துப்புரவு பணி செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக 9300/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது புதிய தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று காலையில் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப் படுத்தியதை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
பணியாளர்களுக்கு கடந்த மாத ஊதியம் மற்றும் புதிய சோர்ஸ் முறையில் ஒப்பந்ததார்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்காமல் இந்த சாலை மறியல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.