பட்டாசு விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு: பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, காரணமான பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செல்வகணபதி 47; பா.ஜ. மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை வைத்திருந்தார். நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு பட்டாசு குடோன் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள பேக்கரியில் வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.
இதனால் அடுத்து அடுத்து இருந்த மூன்று கடைகள் இடிந்து தரைமட்டமாகின. செல்வகணபதியின் தாய் வள்ளி 70 மற்றும் 22 - 75 வயதுள்ள ஐந்து ஆண்கள் என ஆறு பேர் உடல் கருகி இறந்தனர். செல்வகணபதி உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்தின்போது குடோனின் பின்புற வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், செல்வகணபதியின் உறவினர் மகன் தனபாலை வயது 11 காணவில்லை. இதனையடுத்து இடிபாடுகளை அகற்றி சிறுவனை தேடும் பணி நடந்தது. நேற்று மாலை 3:00 மணியளவில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் பேக்கரிக்குள் வெடிக்காமல் இருந்த 16 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி ஏரியில் வீசப்பட்டன
தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆய்வு செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த விபத்தில் வெடித்த வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் அதிகம் இருந்துள்ளது. போதிய பாதுகாப்பு வசதியின்றி குடோனில் அதிகளவு பட்டாசுகளை சேகரித்து வெடி விபத்திற்கு காரணமான சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.