கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
திண்டுக்கல் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் நகை, பணம் கொள்ளை.நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை. போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
திண்டுக்கல் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் நகை, பணம் கொள்ளை.நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை. போலீசார் விசாரணை .
திண்டுக்கல்லை அடுத்துள்ளது மேட்டூர் கிராமம். இங்கு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். வருடத்திற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைக்கும், மேலும் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களும் உண்டியலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம் மற்றும் அம்மன் அலங்கார பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவிலிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வீசி விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உடைக்கப்பட்ட உண்டியலில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் மற்றும் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..