பழங்குடியின மக்கள் வசதிக்காக அரூரில் ஆட்சியர் முகாம் அலுவலகம் தொடக்கம்
பழங்குடியின மக்களின் நலன் கருதி அரூரில் ஆட்சியர் முகாம் அலுவலகம் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தகவல்
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் வேண்டி இதுவரை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மனுக்களை வழங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு மிகுந்த அலைச்சல் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம் ஏற்படுவதோடு அவர்களின் கால நேரமும் விரையமாகின்றது
இதனை போக்கிடும் வகையில் அப்பகுதி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியின் அருகாமையில் உள்ள அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் பழங்குடியினர் நல அலுவலக மாவட்ட திட்ட அலுவலர் நேரில் வருகை தந்து அவ்வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாம் அலுவலகம் அமைத்து அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும், நலத்திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களையும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வாரம் தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முகாம் அலுவலகத்திற்கு தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலக மாவட்ட திட்ட அலுவலர் அவர்கள் வருகை தந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே, அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் மக்கள் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முகாம் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பழங்குடியினர் நல அலுவலக திட்ட அலுவலரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வழங்கலாம் என ஆட்சியர் திவ்யதர்சினி., தெரிவித்துள்ளார்.