தர்மபுரி அதிமுகவில் 279 பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல்: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
தர்மபுரி அதிமுகவில் 279 பதவிகளுக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதைதொடர்ந்து ஒன்றிய, பேரூர் மற்றும் நகர நிர்வாகிகள் தேர்தல் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்டத்தில் கட்சி ரீதியாக உள்ள 20 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள் மற்றும் தர்மபுரி நகரம் ஆகிய அமைப்புகளுக்கு செயலாளர், அவைத்தலைவர், இணைச் செயலாளர் (பெண்), ஒரு பெண் உள்பட துணை செயலாளர்கள்-2 பேர், பொருளாளர் மற்றும் ஒரு பெண் உள்பட மாவட்ட பிரதிநிதிகள்3 பேர் ஆகிய 9 பதவிகளுக்கு என மொத்தம் 279 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
அ.தி.மு.க. தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தர்மபுரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மாநில அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 62 பேர் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விருப்ப மனு கொடுத்தனர்.
இந்த தேர்தலையொட்டி தர்மபுரி கட்சி அலுவலக வளாகத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட விருப்பம் கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்ததால் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னு வேல், நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.