தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருட்டு : போலீசார் விசாரணை
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருட்டு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி வயது 19. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
மாலினிக்கு நேற்று (19ஆம் தேதி) ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் மாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் அருகில் இல்லாத நிலையில் பிறந்த ஆண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கழிவறையில் இருந்து வந்து பார்த்தபோது குழந்தை இல்லை.
அலறியடித்த மாலினி கதறி அழுதார். இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தனர். பின் தர்மபுரி நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தர்மபுரி டிஎஸ்பி அண்ணாதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருடுபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.