தர்மபுரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 548 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 548 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் .திவ்யதர்சினி, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர், உதவி ஆணையர் (கலால்) தணிகாச்சலம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.