நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் உதவி
கடலூரில் நீட் தேர்விற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த இயலாத அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலையினை வழங்கினார்.
HIGHLIGHTS
தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான தகுதித் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்ப கட்டணம் சாதி வாரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 72 மாணவ- மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதாக தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்களுக்கு தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்தும் வகையில் ரூ.86,000/-க்கான காசோலையினை மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரோஸ்நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் திரு.சுந்தரமூர்த்தி, தலைமையாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.