கொரோனா அச்சுறுத்தலையும் மீறி கடலூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்
கடலூர் துறை முகத்தில் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி,ராசாபேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் பைபர் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூர் துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்யப்படும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்வார்கள்.
தற்பொழுது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பான்மையான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். இதனால் கடலூர் மீன்பிடி சந்தையில் வியாபாரம் மந்தம் அடைந்த நிலையில் இருந்தது.
நேற்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனி முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் அசைவ பிரியர்கள் இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலையிலிருந்து மீன் வாங்க அதிக அளவில் பொதுமக்களும்,வியாபாரிகளும் குவிந்தனர்.இதனால் கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் விற்பனை செய்யும் தளத்தில் பொதுமக்கள் மீன் வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது.
இதனிடையே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கடலூர் துறைமுகத்திற்கு வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை, எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.