கடலூரில் கொரோனா விழிப்புணர்வு வாரம் தொடர்பாக கலெக்டர் ஆலோசனை
கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வார காலம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்தநிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டறிந்தார்.
இறுதியில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கோவிட்-19 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கடலூர் மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துண்டு பிரசுரம் வழங்கியும், கைக்கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இணைவழியில் ஓவியப்போட்டிகள் மற்றும் மாணவர்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வினாடி- வினா, கலை நிகழ்ச்சிகள், தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் ஆட்சியர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் சுண்காணிப்பாளர் சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய் ) ரஞ்ஜித் சிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.