மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்
மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சோனங்குப்பம் மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் இரு தரப்பு மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மீனவ கிராமங்கள் சுருக்கு வலைக்கு அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது பெண்கள் மட்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 மணி நேரம் தொடர்ந்த இந்த சாலை மறியல் போராட்டம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரடியாக ஒவ்வொரு மீனவ கிராமமாக சென்று மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவ மக்களிடம் அவர்களின் பிரச்சனை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
அதேபோல சோனங்குப்பம் மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார். சோனங்குப்பம் மீனவ கிராம மக்களுக்கு அதிகாரிகள் மூலம் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காண வழிவகை செய்யப்படும் எனவும், இக்கிராமத்தில் இதற்கு முன்னால் நடந்த குற்ற சம்பவத்திற்கு நீதிமன்றம் மூலம் எதிரிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரப்படும். மேலும் மீனவ கிராம பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைவில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் வருங்காலத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவோம் என உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கரிகால் பாரி சங்கர், தனிபிரிவு காவளல் ஆய்வாளர் திரு. செந்தில்விநாயகம், காவல் ஆய்வாளர் திரு. உதயகுமார், கிராம முக்கியஸ்தர்கள் திரு.ஹரிதாஸ், திரு.முத்துலிங்கம், திரு.சந்திரன் திரு. செம்புகம், திரு.தமிழரசன், திரு.இளையராஜர், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.