கடலூர் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
கடலூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு இருந்தது. அறைக்கதவின் பூட்டில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது.
பின்னர் ஊழியர்கள் கொண்டு வந்த சாவியை வைத்து அறையின் பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், பூட்டு திறக்கவில்லை. உடனே தாங்கள் வைத்திருந்த மற்ற சாவிகளை கொண்டு ஊழியர்கள் பூட்டை திறந்து பார்த்தனர். அப்போதும் திறக்க முடியவில்லை.
இதையடுத்து பூட்டை உடைத்து அறைக்குள் சென்றனர். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறை சாவி தொலைந்த விவகாரத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடலூர் லாரன்ஸ் நான்குமுனை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினரிடம் அ.தி.முகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.