கடலூர் மாவட்டத்தில் 89 லட்ச ரூபாய் பறிமுதல்
கடலூர் மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 89 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் பேருந்து நிலையத்தில் வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகர சகாமுரி,கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர். மேலும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணக்கோலங்கள் வரையப்பட்டிருந்தன. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகர சகாமூரி , கடலூர் மாவட்டத்தில் 58 லட்ச ரூபாய் பணமாகவும் 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பரிசுப் பொருட்களும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வாக்குப்பதிவு நாளன்று 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.