செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது.
இந்த தொழிற்ச்சாலையில் இன்று மாலை 6 மணியளவில் மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதி தீயணைப்பு நிலைய வீரர்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை வீரர்கள் அணைத்தனர்.
இந்த விபத்தில் அதிஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அலுவலகத்தில் இருந்த கழிவு பொருட்கள், குளிர்சாதன பெட்டிகள், முக்கிய ஆவணங்கள் என சுமார் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியதாக தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எரிந்த பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொழிற்சாலை நிர்வாகமும் ஈடுபட்டுவருகின்றது.