திமுக நிர்வாகிகளின் அலப்பறைகள்; அல்லல்படும் தூய்மைப் பணியாளர்கள்
செங்கல்பட்டு அருகே தூய்மைப் பணியாளர்களை திமுக நிர்வாகிகள் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
HIGHLIGHTS
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் ஊராட்சிகளில் பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பாரத இயக்கம் சார்பில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து விளக்குமாறு திமுக நிர்வாகிகள் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தூய்மைப் பணியாளர்கள் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகாரில், செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக நாங்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறோம்.
தற்போது அங்குள்ள திமுக கிளைச் செயலாளர் வரதன் மற்றும் மகளிர் அணி தலைவி அருள்தேவி ஆகியோர் தற்போதுள்ள தூய்மை பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு தேவையானவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதன்காரணமாக தூய்மை பணியாளர்களை தினந்தோறும் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டல் விட்டு வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வில்லியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் சிறந்த முறையில் பணி செய்து வருவதாகவும் அவர்களை பணியிலிருந்து நீக்க கூடாது எனவும், அவர்களை மிரட்டும் ஒரு சிலர் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனுவையும் அளித்துள்ளனர்.
எனவே கொரொனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணி புரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகவினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.