மீண்டும் கொரோனா பீதி; செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
மீண்டும் கொரோனா பீதியால் தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டது.
HIGHLIGHTS
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த தமிழகம் கடந்த மாதம் முதல் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள் பேருந்து சேவை, தனியார் நிறுவனங்கள் திறப்பு என வழக்கம்போல் செயல்பட தாெடங்கின.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கொரொனாவின் மூன்றாவது அலை பீதி காரணமாக மீண்டும் தென் மாவட்டங்களுக்கு இன்று காலை முதல் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பிற்காக கூடியிருந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீண்டும் கொரொனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கித் தவித்து விடக்கூடாது என்ற காரணமாக தங்களது குடும்பங்களுடன் தென் மாவட்டங்களில் நோக்கி செல்வதாக அவ்வழியே செல்லும் மக்கள் கூறுகின்றனர்.