அரியலூர் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
அரியலூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழும சமூக நல உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயது குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தினை கீழ்கண்ட முகவரியில் பெற்றுக்கொள்ளவும் அல்லது மாவட்ட இணையதளமான https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 25.11.2021 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621 704. போன்: 04329 – 224221 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.