நீட் தேர்வை இரத்து செய்ய மனு
நீட்தேர்வால் உயிரிழந்த அனிதாவின் தந்தை சண்முகம், நீட்தேர்வு ஆய்வுக்குழு நீதிபதி ராஜனுக்கு, மெயில் மற்றும் மனு அளித்துள்ளார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் நீட்தேர்வால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அனிதாவின் தந்தை சண்முகம், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு நீட்தேர்வு ஆய்வுக்குழு நீதிபதி ராஜனுக்கு, மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை இரத்து செய்யுமாறு மெயில் மற்றும் மனு அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. +2 தேர்வில் 1176மதிப்பெண்கள் பெற்றும் நீட்தேர்வில் வெற்றி பெறமுடியாததால். தனது மருத்துவர் கனவு பொய்த்துபோனதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். உச்சநீதிமன்றம்வரை சென்று போராடிய அனிதாவின் மரணத்தை தொடர்ந்து இதுவரை நீட்தேர்வால் மனமுடைந்து 13மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருவதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்துள்ளார். நீதிபதி ராஜன் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திவரும் நிலையில், இத்தேர்வால் தனது மகளை இழந்த குழுமூர் அனிதாவின் தந்தை சண்முகம் நிதிபதி ராஜனுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் தனது வறுமை நிலையை குறிப்பிட்டு, தனது மகள் மருத்துவர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளை எட்ட தான் பட்ட கஷ்டங்களை விவரித்து, +2 தேர்வில் தனது மகள் அனிதா 1176மதிப்பெண்களை பெற்ற நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை தனது மகளின் கனவை சுக்குநூறாக்கி விட்டதை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நிரம்பிய அனிதா உச்சநீதிமன்றத்தில் போராடிய வரலாற்றை நினைவு கூர்ந்துள்ளார். நீட் தேர்வு ரத்துசெய்ய முடியாத நிலையில், மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டதை உருக்கத்துடன் விவரித்துள்ளார்.
மேலும் நீட்தேர்வால் இதுவரை 13மாணவர்கள் உயிரிழந்துள்ளதை வேதனையுடன் மனுவில் குறிப்பிட்டுள்ள சண்முகம், மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை இரத்து செய்யுமாறும், இனியும் ஒரு உயிர்கூட நீட் தேர்வால் பலியாக கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேரில் தனது வழக்கறிஞடன் ஆஜராகி விளக்கங்களை தரவும், ஆதாரங்களை சமர்பிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனுவை மெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும் நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து வரும் நீதிபதி ராஜனுக்கு அனிதாவின் தந்தை சண்முகம் அனுப்பியுள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.