அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
28ம்தேதி அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறி நோய் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன் முதலில் வெறி நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த வேதியலாளர் மற்றும் நுண்ணுயிரியல் துறை வல்லுநருமான லூயிஸ் பாஸ்சரின் நினைவு தினமான செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறி நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மற்றும் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்ட மனிதர்களை பாதுகாக்க வெறி நோய் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். உலக அளவில் 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாக வெறி நோயை முழுவதுமாக ஒழிப்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களில் 99 சதவீத வெறி நோய் பாதிப்புகள், வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மூலமாகவே எற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 60,000-க்கும் அதிகமான வெறி நோய் இறப்புகள் மனிதர்களில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் வெறி நோய் பரவலை தடுக்க முடியும்.
கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 3,16,510 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறியச் செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும்.
எனவே, உலக வெறி நோய் தினமான 28.09.2022-அன்று அரியலூர், கால்நடை மருத்துவமனை வளாகத்தில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமில் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.