அரியலூர் மாவட்டத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் அறிவிப்பு
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அவசர கால தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில், தொடர்ந்து கணமழை பெய்துவருவதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை 24x7 நேரமும் இயங்கி கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியரக அவசரகால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 107, 04329 -1077 மற்றும் 04329 228709 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்குமாறும், TMSMART என்ற செயலி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் 10000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதிக அளவில் நீர் வரத்து வந்து கொண்டிருக்கும். எனவே அரியலூர் மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில்குளிக்கவோ, நீந்தவோ மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ அனுமதி இல்லை. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்க செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பபற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க அனுமதி இல்லை.
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2021 காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு குளிக்க செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாழ்வான பகுதிகளிலும், நீர் நிலைகளின் கரைகளின் இருபுறமும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பழுதடைந்த விழும் நிலையில் உள்ள மரங்களுக்கு அருகில் செல்லவேண்டாம். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மழையின் காரணமாக ஆறுகள் மற்றும் வாய்க்காலகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் குறுக்கே செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.