அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையினரின் ரத்ததான முகாம்
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை, அரியலூர் மருத்துவக் கல்லூரி சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் அரியலூர் மருத்துவக் கல்லூரி சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.
புதிதாக திறக்கப்பட்ட அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நாள்தோறும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது. இரத்த வங்கியில் இரத்தம் போதுமான அளவு இல்லை என்ற தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இரத்ததான முகாமை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமை தாங்கி துவங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மருத்துவக் கல்லூரி அவசரகால மருத்துவ நிபுணர் அருண் சங்கர் தலைமையிலான மருத்துவ குழு இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்தத்தை சேகரித்து பாதுகாப்பான முறையில் ரத்த வங்கிக்கு கொண்டு சென்றனர். இந்த ரத்ததான முகாமில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ரத்த தானம் அளித்தனர். இரத்ததானம் அளித்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா ஜூஸ் ,பேரிச்சம்பழம், மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்.
இந்த முகாமில் 75க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் ரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் பத்மநாபன் , அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் ஜீவானந்தம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.