அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரியலூர் நகரில் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரியலூர் நகரில் அண்ணா சிலை அருகே நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் அரியலூர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அரியலுார் மாவட்ட எஸ்பி., சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்து சென்றும், பொதுமக்கள் சாலை பாதுகாப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் கோஷமிட்டனர். அண்ணா சிலையில் இருந்து முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணி ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.