திருமணம் முடிந்ததும் மரக்கன்று நட்ட தம்பதி
தந்தை கல்விபயின்று, ஆசிரியர் பணியாற்றும் அரியலூர் மாவட்டம் நல்லாம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில், திருமணம் முடித்த கையோடு மரங்களை நட்ட தம்பதியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவராக கல்வி பயின்று, அப்பள்ளியிலேயே ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மணிபாரதிக்கும் பத்மப்பிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும் நல்லாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து வளர்ப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக மணமக்கள் உறுதியேற்றனர். இந்நிகழ்ச்சியில் செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிசெல்வி மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மணமகன் மணிபாரதி இது குறித்து கூறுகையில், தனது தந்தை பணியாற்றும் அரசு பள்ளியில் அதிக அளவு மரங்களை வளர்த்து அதனை சோலைவனமாக ஆக்க வேண்டும் என விரும்புவதாகவும் வேப்பமரம், புங்கை, நெல்லி, பாதம், மா, சப்போட்டா, அரசு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றுவேன் என்று கூறினார்.