அரியலூரில் குற்றங்களை தடுக்க புது முயற்சி
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் "தகவல் அளியுங்கள், குற்றத்தை நாங்கள் ஒழிக்கின்றோம்" என்ற அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்களுக்கு மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரை மக்களுக்கு அறிமுகம் செய்து, கிராம குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.அவர் பேசுகையில் தகவல் அளியுங்கள், குற்றத்தை நாங்கள் ஒழிக்கின்றோம் என்ற புதிய முயற்சியின் கீழ் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ள காவலர்களை ஒவ்வொறு கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக நியமித்துள்ளோம்.
அவர்கள் உங்களுடைய கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பார். இதன்மூலம் குற்றங்கள், கலவரங்கள் நடைபெறவுள்ள சூழ்நிலையை முன்கூட்டியே கண்காணித்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இக்கிராம குற்றத்தடுப்பு காவலருக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், கயர்லாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி, கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தர்மகர்த்தாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.