திருவண்ணாமலையில் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற வேண்டுகோள்

நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 00:36 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 

நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருளாதார மேம்பாட்டு திட்டத்தினை மாற்றியமைத்து செயல்படுத்த 2022-23-ம் ஆண்டில் சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்த சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இக்குழு நன்முறையில் செயல்பட இடைநிகழ் செலவு மற்றும் பணிமூலதனம் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் மேற்கண்ட இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று மாவட்ட அளவில் தகுதியான குழுக்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான குழுக்களை தேர்வு செய்திட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குழுக்கள் குறித்து மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News