வராகநதியில் வெள்ளப்பெருக்கு பெரியகுளம் மக்களுக்கு எச்சரிக்கை
கொடைக்கானல் மலையடிவாரப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் வராகநதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியகுளம் நகராட்சி. இங்கு பெய்து வரும் பலத்த மழையால் சோத்துப்பாறை அணை நிறைந்து விநாடிக்கு தொள்ளாயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதர பகுதிகளில் இருந்து வரும் மழை நீரும் சேர்ந்து வராகநதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இதர பயன்பாட்டிற்காகவே ஆற்றுக்குள் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம். வெள்ளம் வடியும் வரை மக்கள் பாதுகாப்பான வாழ்வியல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மற்றும் வாகன ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.