தேனி தொகுதி கம்பத்தில் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம்

தேனி தொகுதி கம்பத்தில் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-04 16:54 GMT

தேனி நாடாளுமன்ற தொகுதி கம்பத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து கனிமொழி பேசினார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று (04/04/2024) தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசமரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அபபோது கனிமொழி பேசியதாவது:-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டு பக்கமே வர மாட்டார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகக் கோரிக்கை வைத்தால் செய்து கொடுக்க மாட்டார். மழை புயல் பாதிப்பு வந்தவுடன் எட்டிப் பார்க்க மாட்டார். அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வருகிறார். ஏதாவது ஓட்டு வாங்கவேண்டும் என்ற கனவோடு மோடி இங்கே வந்து கொண்டிருக்கிறார், அவருக்குத் தெரியவில்லை தமிழ்நாடு என்பது பெரியாருடைய மண், பிரிவினைவாதங்களுக்கு இங்கு இடமில்லை என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மண்ணிலே மக்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த ஜாதி சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பாஜக ஆட்சி செய்யும் இடத்தில் மக்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிரித்து வைத்து அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு இடையே பிரச்சனை உருவாக்கி அரசியல் குளிர் காயக்கூடியது தான் பாஜக.

மணிப்பூர் மாநிலத்தில், பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்தது ஒரு வருடத்திற்கு மேலே அங்கே இருக்கிறவனுக்கு இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனையை ஆரம்பித்தது பாஜக. அங்கு யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை. முகாம்களில் மக்கள் இருந்து கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் வளர்ச்சிக்குப் பைசா கொடுக்க மாட்டார்கள். சமஸ்கிருதத்திற்கு 10 மடங்கு பைசா கொடுப்பார்கள். தமிழ்நாடு என்றுமே அவர்களுக்குச் சரியான பாடத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் நமது வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் இருக்கிறார். டிடிவி தினகரன் அவர்கள் ஜெயலலிதாவின் படத்தை காட்டி ஓட்டு கேட்கிறார் ஆனால் பாஜக கூட்டணியில் இருக்கிறார். என் வாழ்க்கையில் நான் பண்ணப் பெரிய தப்பு பிஜேபியுடன் கூட்டணி வைத்தது, அந்த தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன் என்றார்.ஒரு தேர்தலில் இந்த லேடியா அல்லது மோடியா என்று கேட்டார்.

பாஜகவை எதிர்க்க  கூடிய திராணி இல்லாத ஒரே ஒரு காரணத்தினால், டிடிவி தினகரன் தற்போது பாஜகவில் கூட்டணி வைத்துள்ளார். எந்த தைரியத்தில் இங்கே வந்து வாக்கு கேட்கிறீர்கள், நீங்கள் எப்படி ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.. மக்களை எப்படி ஏமாற்றினீர்கள் என்று தேனி  மக்களுக்குத் தெரியும். ஒரு வாக்குக்காக மக்களை ஏமாற்றியவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடமாட்டார்கள்.

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் 1.15 கோடி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதையும், இவற்றுடன் விடுபட்ட மகளிருக்குத் தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன. காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏராளமான பணிக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர், நாம் அறிவித்துச் செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தை, நேற்று கனடா நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.

நாம் ஒரு ரூபாய் நிதியாக ஒன்றியத்திற்கு வழங்கினால் நமக்கு நிதி பகிர்வாக 25 பைசா மட்டுமே வழங்குகிறது. இதுவே பாஜக ஆளும் மாநிலங்கள் என்றால் நிதி பகிர்வு இரட்டிப்பாக வழங்குகிறது. நேரடி நிதி வருவாயில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டில் தான் அதிகமான நிதி அளிக்கப்படுகிறது. முன்னணி மாநிலம் தமிழ்நாடு கிட்டத்தட்ட 6.24 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறோம். ஆனால் அதில் திருப்பி கொடுப்பது 2.47லட்சம் கோடி தான். உத்தரப் பிரதேசம் அரசு ஒன்றிய அரசுக்குப் பணம் 2.70 லட்சம் கோடி ஆனால் அவர்களைக் கொடுக்கிறது என்றால் 10.8 லட்சம் கோடி, ஐந்து மடங்கு அவர்களுக்குத் திருப்பி தரப்படுகிறது.

ஏன் தமிழ்நாட்டு கொடுப்பதை விட மூன்று, நான்கு மடங்கு குறைவாகத் தருகிறீர்கள். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு நீங்கள் ஆட்சி செய்யக்கூடிய இடத்திற்கு ஐந்து மடங்கு அதிகமாகத் தருகிறீர்கள். அதேபோல் வெள்ள நிவாரணம் கேட்டால் ஒரு பைசா வருவதில்லை. ஆனால் உத்திரபிரதேசம். பீகாருக்கு அதிக அளவில் நிதி கொடுக்கப்படுகிறது.

அதானி, அம்பானி ஆகியோருக்கு நடத்தக்குடிய ஆட்சி இந்த பாஜக ஆட்சி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக இருக்கிறது. அம்பானி வீட்டுக் கல்யாணத்திற்காகப் பாதுகாப்புப் படை விமான நிலையத்தை பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி திருமண பரிசு வழங்கியது.

வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால் அவர்கள் ஒரு ரூபாய் கூட மக்கள் வங்கிக் கணக்கில் போடவில்லை, நாம் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருந்தால் அபராதம் என்ற பெயரில் நம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்குச் செல்லக்கூடிய  பக்தர்களின் வசதிக்காக, லோயர் கேம்ப் வரை ரயில் வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது, ஒன்றியத்தில் தற்போது உள்ள ரயில்வே அமைச்சகம் நமக்கு என்றால் எதுவுமே செய்யாது. ஒன்றியத்தில் நமது ஆட்சி வந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும்.கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது, உத்தம பாளையம் அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கான சிறப்புத் தனி சிகிச்சைப் பிரிவு நமது அரசு கொண்டு வந்துள்ளது. திராட்சை விவசாயிகள் புவிசார் குறியீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள் அதற்கான முயற்சிகளை செய்யப்படும்.

நாம் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த உடன் சமையல் எரிவாயுவின் விலை ₹500 ஆகக் குறைக்கப்படும், அதேபோல் பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News