உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2000 உதவி பெறும் மாற்றுத்திறனாளிகள் அக். 30க்குள் வாழ்நாள் சான்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் அதற்கு மேல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் முலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்று, அதில் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற அக். 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.