நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.10 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.10 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2024-05-06 03:10 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் 96.10 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் நாமக்கல் 10ஆம் இடம் பெற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தேர்வு முடிவுகள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 -ல் நடைபெற்ற பிளஸ் 2 இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8,413 மாணவர்களும், 8,847 மாணவிகளும் என மொத்தம் 17,260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7,989 மாணவர்களும் 8,597 மாணவிகளும் என மொத்தம் 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 94.96 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி 97.17 சதவீதம். மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 96.10 ஆகும். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 10ஆம் இடம் பெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.94 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9ம் இடம் பெற்றிருந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசுப் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 8,309 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,776 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.58 ஆகும். மாவட்டத்தில் 1 ஆதி திராவிட நல பள்ளியியில் மொத்தம் 96 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 87.50 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சார்ந்த மொத்தம் 214 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 92.52 சதவீதம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 1 சமுக நலத்துறைப் பள்ளியியில் மொத்தம் 3 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இதில் 3 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 559 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 545 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 97.49 சதவீதம் ஆகும்.

புவியியல், நர்சிங், மனையியல் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தில் 100 சதவீதம் மாணவ மாணவிகளும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 96.76 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 99.67 சதவீதமும், விலங்கியல் பாடத்தில் 99.50 சதவீதமும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 99.31 சதவீதமும், வேதியியல் பாடத்தில் 99.21 சதவீதமும், வரலாறு பாடத்தில் 99.09 சதவீதமம், மொழி பாடங்களில் 99.05 சதவீதமும், ஆங்கிலத்தில் 98.90 சதவீதமும், கணக்கில் 98.67 சதவீதமும், தாவரவியல் பாடத்தில் 98.60 சதவீதமும், வணிகவியலில் 98.57 சதவீதமும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீதமும், பொருளியல் பாடத்தில் 98.12 சதவீதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 14 அரசுப்பள்ளிகள் உட்பட 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News