குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2024-05-05 09:44 GMT

குமாரபாளையம் போலீஸ் நிலையம்  அருகே உள்ள  பாலமுருகன் கோவிலில் சுவாமி சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

-

குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். சிவாய நமஹா, என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் சுவாமி சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோஷத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் அமுதத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது.

அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

பிரதோஷ விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அனுஸ்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரதம் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போஜனம் செய்தல் வேண்டும்.

Tags:    

Similar News