உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம மக்கள் நெகிழ்ச்சி

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே கூலிப்பட்டியில், உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகனின் செயலால் பொதுமக்கள் இடையில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-06-01 14:15 GMT

namakkal news, namakkal news today- உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அருகே கூலிப்பட்டி சக்தி நகரில், உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து மகன் பிரபு வழிபட்டார்.

namakkal news, namakkal news today- நாமக்கல், துறையூர் ரோட்டில் உள்ள, கூலிப்பட்டி சக்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு (45). இவர் உயிருடன் இருக்கும், தனது தாய் மணிக்கு தனது சொந்த இடத்தில் சிலை வைத்துள்ளார். இன்று உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு, அந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது. உயிருடன் இருக்கும் தாய்க்கு மகன் சிலை வைத்து வழிபடுவது அப்பகுதியினரை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பிரபு கூறியதாவது:

எனது தந்தை நான் சிறுவனாக இருக்கும்போது, இறந்து விட்டார். அதன்பின் எனது தாய் மணி தான் என்னையும், எனது தங்கையையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். வீட்டு வேலைகளுக்கு செல்வது உள்ளிட்ட கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, எங்களது தாயார் எங்களை படிக்க வைத்தார். அப்போது அவரது கஷ்டம் எங்களுக்கு தெரியவில்லை. நான் வேலைக்கு சென்றபோது தான் அம்மாவின் சிரமத்தை உணர்ந்தேன். தற்போது வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். இப்போது எனது அம்மாவை வேலைக்கு அனுப்புவதில்லை. எனினும், அம்மாவுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என எண்ணம் என் மனதில் இருந்து கொண்டிருந்தது. எனவே எனது அம்மாவுக்கு சிலை வைத்துள்ளேன். சிலையை பார்த்த எனது அம்மா நெகிழ்ந்து போய்விட்டார். உலக பெற்றோர் தினம் என்பதால் இன்று (நேற்று) சிலை திறப்பு விழா நடைபெற்றது,என்றார்.

வயதான பெற்றோரை தனியாக தவிக்க விடும், பிள்ளைகள் உள்ள இக்காலத்தில் பெற்ற தாய்க்கு சிலை வைத்து வழிபடும் பிரபுவின் செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News