மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
மோகனூர் சர்க்கரை ஆலையில் அதிகபட்ச ஓய்வூதியம் கோரி ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, உயர்ந்தபட்ச ஓய்தியம் பெற்றுத்தரக்கோரி மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில், கரும்பு அரவையின்போது, 3 ஷிப்ட் முறையில் தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். மற்ற காலங்களில், காலை 8 முதல், மாலை 5 மணி வரை ஒரே ஷிப்ட் நடைபெறும். இங்கு, பணியாற்றியவர்களில், 630 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 500 முதல், அதிக பட்சம் ரூ. 2,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இது, அவர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம். இந்த நிலையில், அதிகபட்ச ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த, 10 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக உயர்ந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர்.
ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விண்ணப்பத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ஆணையரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டி.என்.பி.எல்., சேஷாயி, ஆர்.எம்.எஸ்., பொன்னி சர்க்கரை ஆலை போன்ற நிறுவனங்களில், பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு உயர்ந்தப்டச ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் உயர்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவதற்கு, சில ஆவணங்களை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை ஆலை நிர்வாகத்தினர் இதுவரை வழங்கவில்லை. ஆலை நிர்வாகத்தின் இந்த மெத்தன போக்கை கண்டித்து, 150க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த மேலாண் இயக்குனர் மல்லிகா, ஒரு வாரத்தில், உரிய ஆவணங்களை அனுப்பி, உயர்ந்தபட்ச ஓய்தியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.