ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற கோரிக்கை

ராசிபுரம் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-10-02 00:15 GMT

பயன்பாடு இல்லாமல் உள்ள ராசிபுரம், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்ட அலுவலகம்.

ராசிபுரம் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு, மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், தமிழக தலைமை செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த ஆண்டு முதல் பட்டுக்கூடு அங்காடி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் ரூ.5.18 கோடி மதிப்பீட்டில் பட்டுக்கூடு விற்பனை நடைபெற்று, அரசுக்கு ரூ.7.45 வருவாய் கிடைத்துள்ளது. நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கூடுகளை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து பயன்பெறுகின்றனர். விவசாயிகள் அதிக அளவில் பட்டுக்கூடுகளை கொண்டு வரும்போது, அங்காடியில் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தை தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது செயல்படும் பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் போதுமான வசதிகள் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரப்படுகின்றனர். பொருட்களை வைப்பதற்கும், கூட்டங்கள் நடத்துவதற்கு போதுமான வசதிகள் உள்ள, தற்போது பயன்பாட்டில் இல்லாத தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தை நிரந்தரமாக பட்டுக்கூடு அங்காடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News