நாமக்கல் ரங்கநாதர் கோயில் தேர் ரூ. 56 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தேர் ரூ. 56 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தர்.

Update: 2021-10-25 02:30 GMT

நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் திருத்தேர் புதுப்பிக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அருகில் ராஜேஷ்குமார் எம்.பி.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப்பகுதியில், அருள்மிகு ரங்கநாதன் கோயில் குடவரைக்கோயிலாக அமைந்துள்ளது. இங்கு ரங்கநாதர் அனந்த சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி தேர்த்திருவிழாவின் போது ரங்கநாதர் சுவாமி கோயில் தேர் வீதி உலா நடைபெறும்.

பழமை வாய்ந்து இக்கோயில் திருத்தேரை மராமத்து செய்து புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி இக்கோயில் தேர் ரூ. 56 லட்சம் மதிப்பில் புணரமைக்க அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்தேர் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருத்தேர் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் ரங்கநாதர் கோயில் திருத்தேர் 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ. 56 லட்சம் மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட உள்ளது. இப்பணி 6 மாத காலத்திற்குள் நிறைவடையும். நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது, அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கொல்லிமலையில் 13 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமாக உள்ளது. அங்கு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News