நாமக்கல் அரசு பள்ளிகள் செஸ் போட்டியில் 2,409 மாணவ மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் அரசு பள்ளிகளில் நடந்த செஸ் போட்டியில் 2,409 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2022-07-17 03:46 GMT

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடந்தது.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதன் முறையாக தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆக. 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்ப்பதற்காகவும், சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடவும், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட அளவில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செஸ் போட்டியை நடத்தி மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்காக 4 பிரிவுகளில், 2 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 216 மாணவர்கள் மற்றும் 205 மாணவிகளும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் 447 மாணவர்கள், 373 மாணவிகளும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 318 மாணவர்கள்மற்றும் 270 மாணவிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 368 மாணவர்கள் மற்றும் 212 மாணவிகளும் என மொத்தம் 1,349 மாணவர்கள், 1,060 மாணவிகள் என மொத்தம் 2,409 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள். ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல் 3 இடங்களை பெறக்கூடிய மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாவட்டத்தில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் நடக்கக்கூடிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க மற்றும் சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News