நாமக்கல் மற்றும் குமாரபாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில், ரூ.1 கோடி மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா, 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-01-12 14:00 GMT

நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில் கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களை, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம் – கரூர் பைபாஸ் ரோட்டில், நாமக்கல் முதலைப்பட்டி அருகில், நாமக்கல் எஸ்.ஐ முருகன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவர்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன் (49), ஜெயச்சந்திரன் (67), முகேஷ் (29) என்பதும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து, தேனி மாவட்டத்துக்கு கஞ்சா (போதைப்பொருள்) கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சாவும் ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சேலம் – கோவை பைபாஸ் ரோட்டில், குமாரபாளையம் கத்தேரி ஜங்சன் அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அவ்வழியாக வந்த, 2 காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த, கோவை குனியமுத்தூர் கிஷோர்குமார் (30), உக்கடம் அப்துல் ஜலீல் (30), முஜீப் ரகுமான் (29), சுல்தான் (29) ஆகியோர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோவைக்கு, கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த இரண்டு சோதனையிலும், மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான, 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 2021ல் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என எஸ்.பி தெரிவித்தார்.

Tags:    

Similar News