தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியார் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிப்பதற்காக, சமூக நீதிக்கான பெரியார் விருது கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு தகுதியானவர்களை முதலமைச்சர் தேர்வு செய்வார். இந்த விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 பவுன் தங்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
2021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியார் விருது வழங்குவதற்கு, உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் மூலம் செய்த சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் சுயவிபரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கி, வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.