மதுரையில் தீபாவளிச்சீட்டு மோசடி; தம்பதி தலைமறைவு
மதுரை மாவட்டம், பரவையில் தீபாவளி சீட்டு நடத்தி 600க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த, தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான போலீஸ் எஸ்.ஐ மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். பரவை பேரூராட்சியைச் சேர்ந்தவர் மோகன்குமார். மதுரை குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார் . இவரது மனைவி கஸ்தூரி, தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 600 பெண்களிடம், தலா ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பித் தராமல், இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, மோகன்குமார் - கஸ்தூரி தம்பதி வீட்டை பூட்டிவிட்டு, பணத்துடன் மாயமாகி விட்டனர் . இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.