சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-04-30 11:16 GMT

சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

சோழவந்தானில் மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. நிழற் குடை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இங்கு வட்ட பிள்ளையார் கோவில், வேப்பமர ஸ்டாப், மாரியம்மன் கோவில் ஸ்டாப், பேருந்து நிலையம், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி என ஐந்து பஸ் ஸ்டாப்புகள் உள்ளது.

இந்த பஸ் நிறுத்தங்களில் நிழற் குடை இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் , மதிய வேளையில் பெண்கள் மற்றும் வயதானவர்கள் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.  இப்படி  பேருந்திற்காக காத்து நிற்கும்போது வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் சில நேரங்களில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.

மேலும் பேருந்துகளும் குறைவான அளவில் இயக்கப் படுவதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிறுத்தங்களில் நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. மேலும், ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் வெயிலின் கொடுமை தாங்காமல், ஆட்டோக்களை தேடியும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள நிழல் பகுதியை தேடியும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆகையால், மாவட்ட நிர்வாகம் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News