கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருள் பெற்றனர்.

Update: 2022-02-14 15:45 GMT

சிறப்பு அலங்காரத்தில் நந்தி.

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த சோமவார பிரதோஷத்தில் தை மாத சோமவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் விமர்சையானதாகும்.

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயமாகவும், மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகவும் இருப்பது கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் ஆகும். தை மாத கடைசி பிரதோஷம் மற்றும் தை மாத சோமவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் ஈஸ்வரனுக்கு முன்னர் அமைந்து வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு விஷேச பூஜைகளும், கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர். இதனை தொடர்ந்து பிரதோஷ நாயனார், சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஆலயத்திற்குள் வீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் சூழ, ஓதுவார் திருவாசகம் படிக்க, விஷேச சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News