திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்

Update: 2021-02-13 11:15 GMT

கரூரில் திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவரின் அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

கரூரை சேர்ந்தவர் செங்குட்டுவன். தொழிலதிபரான இவர் திருக்குறள் மீது அலாதியான பற்று கொண்டவர். திருவள்ளுவர் பெயரில் கலை அறிவியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.மேலும் திருக்குறளை வளர்க்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்.இதன் ஒரு பகுதியாக தனது பெட்ரோல் பங்க்கில் பத்து திருக்குறள்களை சொல்லும் மாணவரின் பெற்றோருக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 குறளை கூறும் மாணவரின் பெற்றோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து அறிந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு, தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று திருக்குறளை கூற வைத்து இலவசமாக பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை கூட்டுவதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம். குறிப்பாக இளைய தலைமுறை பண்போடு வளர நமக்கு கிடைத்த அறநூல் திருக்குறள். எனவே திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காக இலவச பெட்ரோல் வழங்குகிறோம் என்றார்.

Tags:    

Similar News