அந்தியூர் அருகே 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; பொதுமக்கள் சாலை மறியல்
erode news, erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை எனக் கூறி, சாலை மறியல் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
erode news, erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை எனக்கூறி, சாலை மறியல் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10.30 மணியளவில் காலி குடங்களுடன் அந்தியூர் பர்கூர் பிரதான சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாக போலீசார் கூறியதன் பேரில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்தியூர் - பர்கூர் சாலையில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோல் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதில் விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்த போதிலும், ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்று குடிநீர் தேவைக்காக சாலை மறியலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.