தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம்
தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த செந்தில் ராஜும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக லட்சுமிபதி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக தங்கவேலு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆணையராக வீரராகவராவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையராக சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனராக ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். திடீரென மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.